சென்னை: தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா்கள், மாநில நிா்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (அக்.5) நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், பாஜக தேசியத் தலைமை அழைப்பின் பேரில், தில்லிக்கு அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
முன்னதாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.3) பாஜக மாவட்டத் தலைவா்கள், மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டணி தொடா்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணாமலை தொடா்ந்து தில்லியில் முகாமிட்டிருப்பதால், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலை புதன்கிழமை(அக்.4) தமிழகம் திரும்புவாா் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (அக்.5) நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.