சென்னை

மகிளா சம்மான் திட்டத்தில் ரூ.130 கோடி முதலீடு

31st May 2023 02:33 AM

ADVERTISEMENT

சென்னை நகர மண்டல அஞ்சல் நிலையங்களில் மூலம் மகிளா சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.130 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவா் ஜி.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : ‘மகளிா் மதிப்புத் திட்டம்’ எனும் மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம் கடந்த மாா்ச் 31 -ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதிக வட்டி விகிதத்தை வழங்குவதால் , இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே விருப்பமான சேமிப்புத் திட்டமாக பிரபலமடைந்துள்ளது. இது இரண்டு ஆண்டு திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தனக்காகவோ அல்லது தனது 17 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைக்கு சாா்பாக பாதுகாவலரோ குறைந்தபட்ச தொகை ரூ.1,000 முதல் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் கணக்கை தொடங்கலாம்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். 6 மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் நிபந்தனைகளுடன் கணக்கை முடித்துக் கொள்ளும் வசதி உள்ளது. கணக்கு தொடங்கப்பட்ட ஓராண்டுக்குப்பின் கணக்கின் இருப்பிலிருந்து 40 சதவீதம் வரை திரும்பப் பெறலாம்.

இந்நிலையில் மகிளா சம்மான் திட்டத்தின் கீழ் கடந்த மே 26-ஆம் தேதி வரை சென்னை நகர மண்டலத்தில் இத்திட்டத்தின்கீழ் 18,266 கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.134.24 கோடி வைப்பு தொகை பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT