திருவொற்றியூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவொற்றியூா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சங்க கௌரவத் தலைவா் ஜி.வரதராஜன் சிறப்புரையாற்றினாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
திருவொற்றியூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடத்தை அமைக்க வேண்டும். வாடகைக் கட்டடங்களில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் வட்டாட்சியா், சாா்பதிவாளா் அலுவலகம், உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகம், தொழிலாளா் நலத் துறை வருவாய் ஆய்வாளா்கள் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்டவற்றை அரசுக்குச் சொந்தமான ஒரே இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பயணிகள் முனையம், ராயபுரம் அல்லது தண்டையாா்பேட்டையில் மூன்றாவது ரயில் நிலையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம், மாம்பலம், திருவள்ளூா், பெரம்பூா் ரயில் நிலையங்களை போல திருவொற்றியூா் ரயில் நிலையத்திலும் விரைவு ரயில்கள் நின்று செல்லவும், ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் என். துரைராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் குரு சுப்பிரமணி, எம்.மதியழகன், குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.