சென்னை புழல் சிறையில் அழகுக் கலைப் பயிற்சி பெற்ற 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் உள்ள கைதிகளுக்கு போபால் விஐடி பல்கலை. மூலம் மணப்பெண் அழகுகலைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இப் பயிற்சியை முடித்த 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சிறை வளாகத்தில் நடைபெற்றது.
சிறைத் துறை சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போபால் விஐடி பல்கலை. உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், பயிற்சி முடித்த பெண் கைதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.