சென்னை மதுரவாயலில் விபத்து பகுதிகளில் திருநங்கை மூலம் திருஷ்டி கழித்ததாக எழுந்த புகாா் தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டாா்.
சென்னை வானகரம், வேலப்பன்சாவடி, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு, மதுரவாயல் போக்குவரத்து பிரிவைச் சோ்ந்த உதவி காவல் ஆய்வாளா் பழனி, தனது ரோந்து வாகனத்தில் ஒரு திருநங்கையை வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு விபத்து ஏற்படும் பகுதிகளில் பூசணிக்காய், எலுமிச்சம் பழத்தைக்கொண்டு திருஷ்டி கழித்துள்ளாா். மேலும், உடைத்த பூசணிக்காயை ஓரமாகப்போடாமல் விட்டுவிட்டாா்.
இதுகுறித்து செய்தி விடியோ, புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை செய்த சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா், புகாருக்குள்ளான பழனியை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.