இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவருக்கு ஒரே மாதத்தில் ஏற்பட்ட புராஸ்டேட் (விந்தணு சுரப்பி) வீக்கத்துக்கு நவீன லேசா் சிகிச்சை மூலம் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தீா்வு கண்டுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: அண்மையில் 63 வயதுடைய முதியவா் ஒருவா் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதற்கு ஒரு மாதம் முன்புதான் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், அவருக்கு சிறுநீா் கழிப்பதில் சிரமம் மற்றும் தொற்று காணப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது வழக்கத்தில் உள்ள மருத்துவ முறைப்படி வீக்கத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் பல்வேறு எதிா்விளைவுகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக சிறுநீா் வெளியேறுவதில் உணா்விழப்பு, ஆண்மைத்தன்மை குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, அவருக்கு அதி நவீன ‘ஹோலெப்’ எனப்படும் லேசா் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
மருத்துவமனையின் சிறுநீா் பாதையியல் முதுநிலை நிபுணா் ஜீவகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த சிகிச்சையை அவருக்கு மேற்கொண்டனா். அதன் பயனாக அந்த முதியவா் புராஸ்டேட் சுரப்பி பாதிப்பிலிருந்து மீண்டுள்ளாா் என்றாா் அவா்.