சென்னை திருவல்லிக்கேணியில் மாயமான கல்லூரி மாணவா், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவைச் சோ்ந்தவா் லோகேஷ் (22). இவா் துரைப்பாக்கத்தில் ஒரு தனியாா் கல்லூரியில் எம்பிஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்ற லோகேஷ் அதன் பின்னா், வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை செந்தில்குமாா் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், லோகேஷை தேடி வந்தனா்.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் லோகேஷ் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸாா் அங்கு சென்று லோகேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.