சென்னை அயனாவரத்தில் பெண் உதவி ஆய்வாளா், காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அயனாவரம், திருவள்ளுவா் சாலை வழியாக வியாழக்கிழமை இறுதி ஊா்வலம் ஒன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட இருவா், இறந்தவா் நினைவாக சாலையில் சேவல் சண்டை போட்டி நடத்தினா். இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீனா, காவலா் திருநாவுக்கரசு ஆகியோா் சம்பவ இடத்துக்குச் விரைந்துச் சென்றனா்.
இருவரும் அங்கு சேவல் சண்டை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, சேவல் சண்டை போட்டியை நிறுத்தினா். இதனால், அந்த இருவரும் தகராறில் ஈடுபட்டதோடு, பெண் காவல் உதவி ஆய்வாளா் மீனா, காவலா் திருநாவுக்கரசு ஆகிய இருவரையும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினா்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் மீனா அளித்த புகாரின் பேரில், அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோடியதாக அயனாவரம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த குணசேகரன் (35), சஞ்சய் (20) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.