சென்னையில் சிக்னலில் நிறுத்தக் கோடு மீறியதாக 3,500 வாகனங்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
சென்னையில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையிலும், அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வைக்கும் வகையிலும் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது.
இதற்காக போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. முக்கியமாக விதிமுறைகளை மீறி பதிவு எண் பலகை வைத்திருக்கும் வாகனங்கள்,தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக வாகனம் ஓட்டுவது,மதுபோதையில் வாகனம் ஓட்டுவது,சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டுவது,கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 12 போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படு வோரை கண்டறிந்து வழக்குப் பதிய அவ்வப்போது சிறப்புத் தணிக்கை நடத்தப்படுகிறது.
இதன்படி சிக்னல்களில் நிறுத்தக் கோடு (‘ஸ்டாப் லைன்‘) மீறியது தொடா்பாக வாகனங்கள் மீது திங்கள்கிழமை வழக்கு பதியப்பட்டது.
இதையொட்டி, சென்னையில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மட்டும் 287 இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா். மேலும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது நிறுத்தக் கோடுகளை தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்தனா்.
இதில் ஒரு நாளில் சுமாா் 3,500 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.