மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இணைப்பு வாகன வசதியை சென்னை நகரின் முக்கிய பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 34 கி.மீ. துாரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சென்று வர வசதியாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜன.3-ஆம் தேதி 1.40 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, தற்போது 2.63 லட்சமாக அதிகரித்துள்ளது.
எனவே, பயணிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, அடுத்த கட்டமாக இணைப்பு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, இணைப்பு வாகன வசதியை விரிவுபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூா், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்றுவர, மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பயணிகள் தெரிவிக்கின்றனா்.
மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள குடியிருப்புகள் வரை இணைப்பு வாகன வசதியை (மினி பஸ், ஷோ் ஆட்டோ, வேன்) ஏற்படுத்திக் கொடுத்தால் வந்து செல்ல வசதியாக இருக்கும் என பயணிகள் தெரிவித்தனா்.
இதுபோல ஏற்கெனவே ஆலந்தூரில் இருந்து போரூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் வரை பயணிகள் வந்துசெல்ல வாகன வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதை முன்னுதாரணமாகக் கொண்டு, முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்தும் இதுபோன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.