சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்த டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமாா் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற விசாரணையில், சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக போக்குவரத்துத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்பகுதி, சுரங்கப்பாதை, மெட்ரோ பணிகள் நடைபெறும் வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்க சாத்தியமில்லை என தமிழக அரசு பதில் அளித்துள்ளது.