சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிகளில் 11,395 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், 229 முதுநிலை ஆசிரியா்கள் ஏற்கெனவே பணியாற்றி வருகின்றனா்.
தற்போது 12 தமிழ் ஆசிரியா்கள் உள்பட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பணிநியமன ஆணைகளை மேயா் பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியாா் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயா்த்தும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆசிரியா்கள் ஒவ்வொருவரும் மாணவா்களின் கற்றல் திறன், தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்குமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.