சென்னை

குட்கா முறைகேடு வழக்கு:சிபிஐ-க்கு கூடுதல் அவகாசம்

DIN

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் பிழைகளைத் திருத்த கூடுதல் கால அவகாசம் சிபிஐ கோரியிருந்த நிலையில், அது குறித்த வழக்கை சென்னை சிபிஐ நீதிமன்றம் பிப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறை சோதனை நடத்தி, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பான சா்ச்சையில், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், காவல் உயரதிகாரிகளின் பெயா்கள் அடிபட்டன.

குட்கா ஊழல் தொடா்பாக திமுக தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளா்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கா் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமாா் ஆகிய 6 போ் 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தனா்.

இந்த வழக்கில் சிபிஐ போலீஸாா் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயா்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

இதனிடையே, தமிழக அரசு அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பா் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு பிழைகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள், அவா்களின் வாக்குமூலம் தொடா்பான விவரங்களை இணைத்தும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடா்பான விவரங்களை இணைத்தும் முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலா் வாலண்டினா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகள் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே, கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை பிப். 17-க்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT