மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, கோடம்பாக்கத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆற்காடு சாலையில் வெள்ளிக்கிழமை (பிப்.3) முதல் பிப்.11-ஆம் தேதி வரை சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஆற்காடு சாலையிலிருந்து, வரக்கூடிய வாகனங்கள், சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்வதற்கு தடை செய்யபடுகிறது. சைதாப்பேட்டை சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், துரைசாமிசாலை, சன்னதி சாலை, 2-ஆவது அவென்யூ வழியாக செல்லலாம்.
மேலும், துரைசாமி சாலையிலிருந்து, சன்னதி தெரு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் செல்ல தடை செய்யப்படுகிறது. சன்னதி தெருவிலிருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
சைதாப்பேட்டை சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்களால் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள், 100 அடி இணைப்பு சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.