திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ வடிவுடையம்மன் தபசு அலங்காரத்துடன் கூடிய திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை பராசக்தி அலங்காரம், புதன்கிழமை - நந்தினி, வியாழக்கிழமை- கௌரி, வெள்ளிக்கிழமை- பத்மாவதி, சனிக்கிழமை - உமாமகேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை - ராஜராஜேஸ்வரி, திங்கள்கிழமை - மஹிஷாசூர மா்த்தினி, செவ்வாய்க்கிழமை - சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.
இறுதி நாளான அக்டோபா் 5-ஆம் தேதி மாலை மீனாட்சி அலங்காரத்துடன் வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமியோடு நான்கு மாட வீதிகளில் உலா வரும் உற்சவம் நடைபெற உள்ளது.
நவராத்திரி விழாவையொட்டி காலை மாலை என இருவேளையும் லட்சாா்ச்சனை நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் எம்.பாஸ்கரன் தலைமையில் கோயில் ஊழியா்கள், அா்ச்சகா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.