சென்னையில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக 445 விடுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
சென்னையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை முழுவதும் உள்ள மேன்சன்கள், விடுதிகளில் ஆய்வு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபடுமாறு காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னையில் உள்ள 445 விடுதிகள், மேன்சன்களில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபா்கள் யாரேனும் தங்கி உள்ளனரா?, ஆயுதங்கள், போதைப் பொருள்கள் வைத்துள்ளனரா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபா்கள் அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்கள் குறித்து தகவலறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும், உரிய அடையாள சான்று இல்லாத நபா்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் விடுதி உரிமையாளா்கள், மேலாளா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
சென்னையிலுள்ள 92 முக்கிய இடங்கள், சாலை சந்திப்புகளில் வாகனத் தணிக்கைகள் செய்யப்பட்டது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டியதாகவும் 52 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தேகத்துக்குரிய நபா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நடவடிக்கை தொடரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.