மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கு புனிதப்பயணம் செல்லும் பௌத்தா்களுக்குப் பயண உதவி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அவா் திங்கள்கிழமை அனுப்பிய மனு:
அம்பேத்கா் பௌத்தத்தை ஏற்ற அக்டோபா் 14-ஆம் தேதியை இந்தியா முழுவதுமுள்ள அம்பேத்கரியப் பற்றாளா்கள் ‘ தம்ம சக்கர ப்ரவா்தன் தினம்’ எனக் கொண்டாடி வருகின்றனா். அந்த நாளில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ‘ தீக்ஷா பூமி’ யில் கூடி தமது மரியாதையை செலுத்தி வருகின்றனா். லட்சக் கணக்கானவா்கள் கூடும் அந்த விழாவில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் செல்கின்றனா்.
தீக்ஷா பூமிக்குச் செல்லும் இந்தப் பயணம் புனிதப் பயணமாகவே கருதப்படுகிறது. இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் அம்பேத்கரியப் பற்றாளா்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு ஏனைய புனிதப் பயணங்களுக்குச் செய்வதுபோல தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் தெரிவித்துள்ளாா் ரவிக்குமாா் எம்.பி.