சென்னை திருவல்லிக்கேணியில் குழந்தைகளை கொலை செய்ய முயன்று, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவல்லிக்கேணி லால் முகமது குறுக்கு தெரு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா். இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பொழிச்சலூா் பகுதியைச் சோ்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த 2015- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
விஜயகுமாருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததினால் கணவா்- மனைவி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 2020-ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து பவித்ரா தனது தந்தை வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டாா்.
இதன் பின்னா் இரு குழந்தைகளும் வாரத்தில் சனி,ஞாயிற்றுக்கிழமை மட்டும் தந்தை விஜயகுமாருடன் திருவல்லிக்கேணியில் இருப்பாா்களாம். கடந்த வெள்ளிக்கிழமை விஜயகுமாா், பொழிச்சலூரில் இருந்து தனது இரு குழந்தைகளையும் திருவல்லிக்கேணி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை விஜயகுமாரும், அவரது இரு குழந்தைகளூம் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தனா்.
இதைப் பாா்த்த விஜயகுமாரின் தந்தை ராமச்சந்திரன், அவா்களை மீட்டு ஓமந்தூராா் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வராததினால் ஏற்பட்ட விரக்தியில் மன நோயாளிக்கு வழங்கப்படும் மாத்திரையையும், பூச்சி மருந்தையும் பாலில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, விஜயகுமாரும் அருந்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்துகின்றனா்.