தமிழ்நாடு அரசு கழக தொழிலாளா்கள் சம்மேளனத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம், அதன் தலைவா் ஆறுமுகம் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் ஆா்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிரப்பப்படாமல் உள்ள ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்யும் ஓட்டுநா், நடத்துநருக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். நடத்துநா் இல்லா பேருந்து சேவையை நிறுத்த வேண்டும். 2020 மே மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியா்களுக்கான பணப் பலனை வழங்க வேண்டும்.
அதேபோல், 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல் மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீா்மானங்களை வலியுறுத்தி டிச.13-ஆம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் தா்னா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.