சென்னை

கள்ளக்குறிச்சி மாணவியின் கைப்பேசியை ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு

15th Nov 2022 12:31 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய கைப்பேசியை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கும்படி, மாணவியின் தந்தைக்குச் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி மாணவி இறப்பில் நியாயமான விசாரணைக் கோரி அவரது தந்தை ராமலிங்கம் வழக்கு தொடுத்திருந்தாா். அந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த நீதிமன்றம், அதன் அறிக்கைகளைப் பெற்று ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தபோது, சிறப்புப் புலன் விசாரணைக் குழு, சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தாா். அதில், மாணவி பயன்படுத்திய கைப்பேசி, விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

மனுதாரா் ராமலிங்கம் தரப்பில் வழக்குரைஞா் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளா்ந்துள்ள காலத்தில் கைப்பேசியை ஒப்படைத்தால்தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை என்றாா். மேலும், கைப்பேசியை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தைப் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் கோரினாா். உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தாா்.

பின்னா் நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தாா்கள் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் என்றும், இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய கைப்பேசி உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் எனத் தெரிவித்ததுடன், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரா் தனது மகள் பயன்படுத்திய கைப்பேசியை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டாா்.

மேலும், கைப்பேசியை ஒப்படைத்தது தொடா்பாக மனு தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பா் 15-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT