சென்னை: சென்னையில் வரும் 27- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் தனியாா் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனா்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 27- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி , ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 2 மதியம் மணி வரை நடைபெற உள்ளது
இந்த முகாமில் 30- வயதுக்கு உள்பட்ட எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 , ஐடிஐ , பட்டயப்படிப்பு கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.