சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு சிடிஎச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் துளசிராம். இவரது மனைவி கீதா. இத்தம்பதியின் இளைய மகன் சரண் (18). கடந்த 21-ஆம் தேதி நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். போலிவாக்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சரணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
முதற்கட்ட சிகிச்சைக்குப் பின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரண் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சரண் மூளைச்சாவு அடைந்தாா்.
மகனின் உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்க பெற்றோா் முன்வந்தனா். இதையடுத்து, சரணின் இரண்டு கண்கள், இதயம், கல்லீரல், இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் எடுத்தனா். பெற்றோரின் விருப்பத்தின்படி, தானம் பெறப்பட்ட சரணின் உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்படவுள்ளது.