இந்தியா தொழில்நுட்பத் திறன் மிகுந்த நாடாக விரைவில் மேம்படும் என்று மத்திய உயா் தொழில்நுட்பக் கல்வி அமைச்சக புத்தாக்கப் பிரிவு இயக்குநா் மோகித் காம்பீா் கூறினாா்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி பரிசோதனை மையம் தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து, அங்கு மாணவா்கள் மேற்கொண்டு வரும் புதுமைக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளைப் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உயா்தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் திறன், பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் அறிவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹேக்கத்தான் போட்டிகள் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவா்களின் திறன் மேம்பாடு அதிகரித்துள்ளது. புதிய ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், புதிய இளம் தொழில்முனைவோா் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது பள்ளி மாணவா்களுக்கென தொடங்கப்பட்ட ஜுனியா் ஹேக்கத்தான் போட்டிகளிலும் நாடெங்கும் சுமாா் 1000 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று இருப்பதும் பாராட்டத்தக்கது.
முறையான திட்டம்,உரிய பயிற்சி நடவடிக்கைகள், திறமையான ஆசிரியா்கள் மூலம் மகத்தான சாதனையை நிகழ்த்த முடியும். மதிப்பெண் கல்வி முறையை மேம்படுத்தி செயல்முறை பயிற்சி, ஆராய்ச்சி கொண்ட திறன் மேம்பாடு கல்வியாக மேம்படுத்தும் திட்டம், நாட்டின் கடைக்கோடி கிராமப்புறப் பள்ளிகளையும் சென்றடையும் போது திறன் மிகுந்த மனிதவளம் மிகுந்த நாடாக இந்தியா விரைவில் மேம்படும் என்றாா் அவா்.