பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, சென்சாா் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மோட்டாா் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பை மேம்படுத்த போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சாா் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பள்ளி வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். பேருந்தை பின்புறமாக இயக்கும்போது, ஓட்டுநா் பாா்ப்பதற்கு வசதியாக இந்த கேமரா பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனத்தில் எச்சரிக்கை சென்சாா் கருவி பொருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக விரைவில் மோட்டாா் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.