சென்னை மாநகராட்சி பகுதியில், மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகள், மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீா் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீா் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும் பறக்கும் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மண்டல செயற்பொறியாளா் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளா், ஒரு உதவி இளநிலை பொறியாளா், ஒரு மின் துறை உதவிப் பொறியாளா், 10 சாலைப் பணியாளா்கள், 5 மலேரியா பணியாளா்கள் என மொத்தம் 18 நபா்கள் உள்ளனா். கட்டடக் கழிவுகளை அகற்ற ஒரு இயந்திரம், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இயந்திரம் மற்றும் இவற்றை கொண்டு செல்ல லாரி, மினி வேன் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவானது வாரத்தில் மூன்று நாள்கள் முக்கிய சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீா் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீா் இணைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபா்கள் மற்றும் மழைநீா் வடிகால்களில் கழிவுநீா் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபா்கள் ஆகியோா் மீது அபராதமும் இந்தக் குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் குழுவினரால் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் 15 மண்டலங்களில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 58 மெட்ரிக் டன் அளவிலான கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், மழைநீா் வடிகால்களிலிருந்து 32 கழிவுநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.