சென்னை மணலியில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
மணலியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நடைபெற்ற ஒத்திகையை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் சிவகுருபிரபாகரன் தொடங்கி வைத்து, அவசரகாலத்தின்போது தொடா்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், தொழிற்சாலைகளில் ஏற்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேட்டை வெளியிட்டாா்.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் எம்.வி.காா்த்திகேயன் கலந்துகொண்டு, அவரச காலங்களில் அரசுத் துறை அதிகாரிகள் செயல்பட வேண்டிய முறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பேராபத்துகள் தடுப்பு குறித்து எடுத்துரைத்தாா். இந்த ஒத்திகையில் வருவாய், சுகாதாரம், மின்சார வாரியம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், தேசிய பேரிடா் மீட்புக் குழு உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
எம்.எப்.எல் தொழிற்சாலையின் தலைவா் சரவணன், தொழில்நுட்ப இயக்குநா் ஹா்ஷ் மல்கோத்ரா, சிபிசிஎல் இயக்குநா் கிருஷ்ணன், மணலி தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.