‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’க்கு தகுதியுடையோா் வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கப்பலோட்டிய தமிழன் வஉசி.யின்150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசால் ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.விருது’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகி ய கப்பல் தொடா்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழா் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
தமிழக அரசு அறிவித்துள்ள ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளா்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் ‘விருதுவிண்ணப்பம்’ என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்பு, புகைப்படம் இரண்டு, கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடா்பான துறைகளில் ஈடுபட்டு பங்காற்றிய விவரங்களுடன் ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ் வளா்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூா், சென்னை-600 008’ என்ற முகவரிக்கு ஜூன் 24-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
இது குறித்து மேலும் தகவல் பெற 044-28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்கள், tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.