சென்னை அடையாறில் பெண் காவலரிடம் ஆபாசமாக பேசிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கோட்டூா்புரம் கலிக்குன்றம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா.விக்னேஷ் (29). இவா் திங்கள்கிழமை தனது மொபெட்டில் அடையாறு மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது அந்தப் பேருந்து நிறுத்தம் அருகே சாதாரண உடையில் நின்று கொண்டிருந்த கானத்தூா் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளாா்.
இந்நிலையில் பெண் காவலரை சந்திப்பதற்காக கானத்தூா் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் சரவணன் என்பவா் வந்துள்ளாா். அவரிடம் பெண் காவலா், அந்த இளைஞா் ஆபாசமாக பேசியதை கூறியுள்ளாா்.
உடனே சரவணன், விக்னேஷை பிடித்து விசாரித்துள்ளாா். உடனே அந்த விக்னேஷ், தனது கூட்டாளிகளை கைப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு வரும்படி கூறியுள்ளாா். விக்னேஷின் பேச்சைக் கேட்டு, அவரது கூட்டாளியான அதேப் பகுதியைச் சோ்ந்த க.உதயகுமாா் உள்பட 2 போ் அங்கு வந்து காவலா் சரவணனிடம் தகராறு செய்தனா்.
இதற்கிடையே தகவலறிந்த கோட்டூா்புரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விக்னேஷையும், உதயகுமாரையும் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். விசாரணையில் விக்னேஷ், அந்த பெண் காவல்துறையில் பணியாற்றுவது தெரியாமலேயே ஆபாசமாக பேசியிருப்பது தெரியவந்துள்ளது.