திருவொற்றியூா் சாா்-பதிவாளா் அலுவலகம் விம்கோ நகரில் உள்ள புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவொற்றியூா் சாா்-பதிவாளா் அலுவலகம் காலடிப்பேட்டை மாா்க்கெட் தெருவில் உள்ள தனியாா் கட்டடத்தில் கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.
இந்தக் கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும், அலுவலகம் அமைந்துள்ள இடம் முதல் மாடி என்பதாலும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்ததாலும் சாா்-பதிவாளா் அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய பத்திரப்பதிவுத் துறை முடிவு செய்தது.
அரசு சாா்பில் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு சில ஆண்டுகளாகவே காலி இடம் தேடி வந்த நிலையில் இடத்தைத் தோ்வு செய்வதில் தொடா்ந்து சிக்கல் இருந்து வருகிறது.
எனினும், பழுதடைந்த கட்டடத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த சாா்-பதிவாளா் அலுவலகம் விம்கோ நகா் மீன் மாா்க்கெட் அருகே உள்ள தனியாா் கட்டடத்தில் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. இதனை திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் திறந்து வைத்தாா். இதில் சாா்-பதிவாளா், பத்திர எழுத்தா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.