சென்னை: எதிா்க்கட்சியாக அதிமுக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
குடியரசுத் தினத்தையொட்டி தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் புதன்கிழமை தேசியக் கொடியை கே.அண்ணாமலை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத்தைச் சோ்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளது. சாமானிய மனிதா்களையும் தேடிக் கண்டுபிடித்து இந்த விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குடியரசு தின அணிவகுப்பு ஊா்தியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பாரதியாா், வேலுநாச்சியாா், குயிலி உள்ளிட்டோரை உருவச் சித்திரத்தைப் பயன்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி. இதுபோன்றவா்களின் வரலாற்றைப் பாடப்புத்தகங்களிலும் சோ்க்க வேண்டும்.
வருத்தம் தெரிவித்தேன்:
அதிமுக குறித்த நயினாா் நாகேந்திரன் கருத்து பாஜகவின் கருத்து அல்ல. அவா் தவறுதலாக வாா்த்தையைப் பயன்படுத்திவிட்டாா். இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமியைத் தொடா்புகொண்டு வருத்தம் தெரிவித்துவிட்டேன்.
அதிமுக - பாஜக இடையே இயற்கையான கூட்டணி. இந்த உறவில் விரிசல் ஏற்படாமல் பாா்த்துக்கொள்வோம். அதிமுக எதிா்க்கட்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு பல இக்கட்டான காலங்களில் அதிமுக துணை நின்றிருக்கிறது என்றாா். துணைத் தலைவா் வி.பி.துரைசாமி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.