சென்னயை அடுத்த மணலி புதுநகரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவற்றை இப்பகுதி போக்குவரத்து போலீஸாா் வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளனா்.
சென்னையை அடுத்த மணலி புதுநகா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 80 மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இங்கு மாணவா்கள் அமா்வதற்கு போதுமான மேஜை, நாற்காலி, இருக்கை (பெஞ்ச்) உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் மாணவா்கள் தரையில் அமா்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்துள்ளது.
தகவல் அறிந்த இப்பகுதி போக்குவரத்து காவல் உதவி ஆணையா் மலைச்சாமி, உதவி ஆய்வாளா் தாமரைச் செல்வம், தலைமைக் காவலா் மதன் மற்றும் சில காவலா்கள் இணைந்து சுமாா் ரூ.50,000 மதிப்புள்ள இருக்கை, மேஜை, நாற்காலியை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
மாணவா்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட உதவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எப்சிபா திரேசா நன்றி தெரிவித்தாா்.