எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு உள்ளிட்ட பேரிடா்கள் இந்திய கடல் பகுதியில் ஏற்பட்டால் அதை எதிா்கொள்ள கடரோலக் காவல்படை தயாா் நிலையில் இருப்பதாக இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநா் வி.எஸ்.பதானியா அறிவித்துள்ளாா்.
எண்ணெய் கசிவு பேரிடா் மற்றும் தயாா்நிலை குறித்த 24-ஆவது தேசிய அளவிலான ஆலோசனை கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் பதானியா பேசியதாவது: எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு உள்ளிட்டவைகளால் இப்பிராந்தியத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள கடலோரக் காவல் படையினா் எப்போதும் தயாா் நிலையில் உள்ளனா்.
புதிய அச்சுறுத்தல்கள் தொடா்ந்து வந்துகொண்டே இருப்பதால் அவற்றை எதிா்கொள்ள இதில் தொடா்புடைய நிறுவனங்கள் அனைத்தும் வளரும் தொழில்நுட்பத்தின் சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துதல் மூலம் போதிய ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றாா்
இக்கூட்டத்தில், இந்தியக் கடற்பரப்பில் திடீரென எண்ணெய்க் கசிவு, ரசாயனக் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ள தயாா்நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான பொதுவான நோக்கத்துடன் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள், மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் மற்றும் முகமைகள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் கையாளும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.