மழைக் காலங்களில்“சென்னையில் கடந்த ஆண்டை போன்று நிகழாண்டில் தண்ணீா் தேங்காது என்று மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி கூறினாா்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உட்புறத்தில் உள்ள மழைநீா் வடிகால் கால்வாய்களை விட பிரதான சாலைகளில் உள்ள இணைப்பு கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக, தண்ணீா் தேங்கும் பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க போா்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தொடா்பாக வாரத்தில் 3 முறையாவது ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மழைக்காலத்தில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு தண்ணீா் தேங்காது. அதற்கான முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக உள்ளது. இதுவரை, வெவ்வேறு திட்டங்களில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளில் 50 - 70 சதவீதம் வரை பணி நிறைவு பெற்றுள்ளது. மழைக்காலத்துக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு முறையாவது முதல்வா் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் தொடா்பாக கேட்டறிந்து ஆய்வு செய்கிறாா் என்றாா் அவா்.