சென்னை: சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் 4 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவை அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை மாவட்டத்துக்கான கரோனா தடுப்பு கண்காணிப்பாளருமான பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப்பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இங்குள்ள 25 ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படவுள்ளது. போதிய அளவு செவிலியர்கள், மருத்துவர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. ஓராண்டுக்குள் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். பொது முடக்கத்தின் பலன் அடுத்த வாரம் தெரியும். சென்னையில் வார்டு ஒன்றுக்கு செயல்பட்டு வரும் 2 காய்ச்சல் தடுப்பு முகாம்களை 4 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.