தாம்பரம்: பல்லாவரத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
சென்னை புறநகா் பகுதிகளான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா் உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவச் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு பொதுமுடக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், பல்லாவரம் தொகுதி முழுக்க கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழக அரசின் கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைக்கு உறுதுணை புரியும் வகையில், பல்லாவரம் தொகுதிக்குள்பட்ட அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா். பல்லாவரம் நகராட்சி ஆணையா் மதிவாணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.