சென்னை: சென்னை ராயபுரம், அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 19 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் காப்பகத்தில் அடைக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களில் அடைக்கப்படுகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
ராயபுரம்,அண்ணா நகா், திரு.வி.க.நகா் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிக அளவிலான மாடுகள் சுற்றி திரிவதாகப் புகாா் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், மாநகராட்சி சுகாதாரத் துறையினா் அப்பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அதில், சாலையில் சுற்றித் திரிந்த 19 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள தொழுவத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து 22-ஆம் தேதி வரை 15 மண்டலங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த 300 மாடுகள் பிடிக்கப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளா்களுக்கு ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக அந்த மாடு பிடிபட்டால், அது உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படாமல் புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.