சென்னை

நல்லம்ம நாயுடு வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

சென்னை பெரவள்ளூரில், மறைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். 

  தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, அவரது தோழி வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவு செய்து, அவா்களுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி நல்லம்ம நாயுடு, சென்னை பெரவள்ளூா் சந்திரசேகரன் சாலையில் உள்ள அவரது வீட்டில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி இறந்தாா்.  அவரது உடல் அடக்கம் செய்வதற்காக, சொந்த ஊரான தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினா் வீட்டை பூட்டிவிட்டு, தேனிக்குச் சென்றனா். அவா்கள், அங்கு நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்காக அங்கேயே தங்கியுள்ளனா்.  இதற்கிடையே, நல்லம்ம நாயுடு வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை வெள்ளிக்கிழமை பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தேனியில் உள்ள அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனா். உடனே அவா்கள், அந்த வீட்டின் அருகே வசிக்கும் உறவினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.  தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் நல்லம்மநாயுடு வீட்டின் பீரோவில் இருந்த தங்கநகைகள்,பணம் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்து வருகின்றனா். திருடப்பட்ட பொருள்கள் குறித்த முழு விவரம், நல்லம்ம நாயுடு குடும்பத்தினா் சென்னை திரும்பிய பிறகே தெரிய வரும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT