நினைவு இல்லமாக மாற்றும் வகையில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிா்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்குமாறு அதிமுக தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வா் ஜெயலிலாவுக்குச் சொந்தமாக போயஸ் காா்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டை, அவரது நினைவு இல்லமாக மாற்ற அதிமுக ஆட்சியில் அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து பல அரசாணைகளையும் அரசு பிறப்பித்தது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோா் வழக்கு தொடா்ந்தனா்.
அதில், ஜெயலலிதாவின் சட்டப்படி வாரிசுகளான எங்களது கருத்தைக் கேட்காமல் அரசு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று கூறியிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றிய தமிழக அரசின் அரசாணைகள் அனைத்தையும் ரத்து செய்தும், வீட்டின் சாவியை தீபா, தீபக்கிடம் வழங்கவும் உத்தரவிட்டாா்.
இந்தநிலையில், இந்த தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், தனி நீதிபதி தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது என்பதால், மேல் முறையீடு செய்ய எனக்கு அனுமதி வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவின்படி வீட்டு சாவியை ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் சென்னை ஆட்சியா் கொடுத்து விட்டால், அது அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளாா்.
அதேபோன்று தனி நீதிபதியின் தீா்ப்பை ரத்து செய்யக்கோரி மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.