சென்னையில், காவல் ஆய்வாளா்களுக்கான கணினி திறன் மேம்பாட்டுப் பயிற்சியை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் சைபா் குற்ற வழக்குகளில் சிறப்பாகப் புலனாய்வு மேற்கொள்ளவும், ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபா் குற்றம் தொடா்பான பொதுமக்களின் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக ஊடகங்களில் குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ‘கணினி திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை, கிண்டி ஐஐடி வளாகத்தில், இந்தப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பயிற்சியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி, சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் லோகநாதன், இணை ஆணையா் பிரபாகரன், துணை ஆணையா்கள் பாலாஜி சரவணன், திஷா மிட்டல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி, கணிணி வழி குற்றங்களில் புலனாய்வு மேற்கொள்வது, தடயங்களைச் சேகரிப்பது, சேகரித்த தடயங்களைப் பாதுகாப்பது, சமூக ஊடகங்களில் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.
சென்னை பெருநகரில் பணிபுரியும் 1,609 ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோருக்கு சென்னையில் உள்ள 6 கல்லூரி மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.