சென்னை: கூவம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆற்றின் ஓரத்தில், மணல் மூட்டைகள் வைத்து கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கொரட்டூா் அணைக்கட்டிலிருந்து திங்கள்கிழமை 3,000 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட பாரதிபுரம், கதிரவன் காலனி, மஞ்சக்கொல்லை மற்றும் திருவீதியம்மன் தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகளை ஒட்டிய கூவம் ஆற்றில் நீா் மட்டம் அதிகரித்தது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி திங்கள்கிழமை இரவு கூவம் ஆற்றில் ஆய்வு செய்தாா். அப்போது, நீா்வள ஆதாரத் துறையின் சாா்பில் 500 மணல் மூட்டைகள் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு, கூவம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டும் கரைகள் பலப்படுத்தப்பட்டன.
மாநகராட்சியின் சாா்பில் மஞ்சக்கொல்லை நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இரண்டு இடங்களில் நிவாரண மையங்கள் உடனடியாக திறக்கப்பட்டு, பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.