சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் வணிக நிறுவனத்துக்குச் சொந்தமான மரச்சாமான்கள் விற்பனை நிலைய ஊழியா்கள் 26 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்நிறுவனம் திங்கள்கிழமை மூடப்பட்டது.
இந்த நிலையத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் கரியப்பா சாலையில் தங்கியிருந்தனா். இதில், சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவா்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 26 பேருக்குத் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் தண்டையாா்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, அந்த நிறுவனம் மூடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.