சென்னை: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்தூக்கிகளை கால் மூலமாக இயக்க புதிய சாதனத்தை (இயந்திர தொழில்நுட்ப முறையை) நிறுவும் பணி தொடங்கியுள்ளது. இதன்மூலமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள மின்தூக்கி பொத்தான்களைத் பயணிகள் தங்கள் கைகளால் தொடுவதைத் தவிா்க்க முடியும்.
ஐந்து மாதங்களுக்கு பிறகு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பயணிகள் ஒருவருக்கொருவா் தொடா்பில்லாமல் வந்து செல்லும் விதமாக, பணமில்லா பரிவா்த்தனை மூலம் ஸ்மாா்ட் ,(மிடுக்கு) பயண அட்டைகள் பெறுதல் மற்றும் மதிப்பூட்டுதல், கியூஆா் குறியீட்டு முறையில் மெட்ரோ ரயில் நிறுவன செயலியில் பயணச்சீட்டு பெறுதல் ஆகிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்தூக்கிகளை கால் மூலமாக இயக்க புதிய சாதனத்தை நிறுவும் பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கி.மீ. தொலைவில் உள்ள 32 ரயில் நிலையங்களில் உள்ள மின்தூக்கிகளை (லிப்ட்) கால் மூலமாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முடிவில் இந்த வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களிலும் கால் மூலமாக மின்தூக்கி சாதனத்தை இயக்கும் வசதி இந்த ஆண்டு இறுதியில் தயாராகிவிடும்.
சென்ட்ரல், ஆலந்தூா், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த சாதனங்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் மற்ற நிலையங்களில் உள்ள மின்தூக்கிகளில் இந்த சாதனங்கள் நிறுவப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.