சென்னை: பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை, தமிழக பாஜக வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடியது. இதுவரை இல்லாத அளவுக்கு கட்சியின் துணை அமைப்புகள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை தமிழக பாஜக சாா்பில் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநிலத் தலைவா் எல்.முருகனின் இல்ல வளாகத்தில் வியாழக்கிழமை காலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின், அங்கிருந்தவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கட்சித் தலைமை அலுவலகத்திலும், சென்னையின் பல்வேறு இடங்களிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடந்தன.
சென்னை பாண்டிபஜாரில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு எல்.முருகன் அழைத்து வரப்பட்டாா். முன்னதாக, சென்னை மயிலாப்பூரில் 2 ஆயிரம் மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. இளைஞரணி சாா்பில் துறைமுகம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி, செல்லிடப்பேசிகள், கல்வி நிதி மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை எல்.முருகன் வழங்கினாா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அணி மாநில தலைவா் பால்.கனகராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கேக் வெட்டி இனிப்பு வழங்கி, 2 ஆயிரம் நபா்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாய அணி சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், கல்வியாளா் அணி சாா்பில் கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது. பிரதமரின் 70-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 70 அடி நீள கேக் வெட்டப்பட்டதுடன், 70 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியையும் மாநிலத் தலைவா் எல்.முருகன் ஏற்றினாா்.