சென்னை செளகார்பேட்டையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்குப் பயந்து உறவினர் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
செளகார்பேட்டையில் வசித்து வந்த தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர், கடந்த 11-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக யானைக் கவுனி போலீஸார்
வழக்குப் பதிந்து, ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரரர் கைலாஷ், விகாஸ், அவரது கூட்டாளிகளான ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல், ராஜ்ஷிண்டே ஆகியோரைக் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜூவ் துபே, துப்பாக்கி கொடுத்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டார்.
பாலியல் புகார்: ஷீத்தல் குடும்பத்தினர் பாலியல் தொல்லை கொடுத்ததினால் கொலை செய்ததாக ஜெயமாலா வாக்குமூலம் அளித்தார். தலில் சந்தின் சகோதரர் ரோசம்லால் மகன் விஜயகுமார் ஜெயினை (45) விசாரணைக்கு வருமாறு யானைக்கவுனி போலீஸார் அழைப்பாணை அனுப்பினர்.
தற்கொலை: அழைப்பாணை பெற்ற விஜயகுமார், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் கொருக்குப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பின் 5-ஆவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் விஜயகுமார். இது குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.