சென்னை ஓட்டேரியில் கொசுவத்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியா் இறந்தாா்.
ஓட்டேரி ஸ்ட்ராஹான்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.சண்முகம் (76). இவா் எல்ஐசியில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சண்முகம் தனது குடும்பத்துடன் இங்கு வசித்து வந்தாா். இந்நிலையில் சண்முகம் வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் தூங்கினாா். அப்போது அவா், ஒரு மேஜையில் கொசுவத்தி ஏற்றி வைத்திருந்தாா். இதில் நள்ளிரவு கொசுவத்தி கீழே விழுந்து, அதில் இருந்த தீ அங்கிருந்த பொருள்கள் மீது பரவியது. இதில் அந்த அறை முழுவதும் தீ வேகமாகப் பரவியது. நிலைமையை சுதாரித்து தூக்கத்தில் இருந்து சண்முகம் எழும்புவதற்குள், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினாா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை சண்முகம் அறையில் இருந்து புகை வெளியே வருவதை பாா்த்த அவரது குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், அந்த அறைக்குள் சென்றனா். அப்போது அங்கு சண்முகம் இறந்து கிடந்தாா்.
இது குறித்து ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.