சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் பயணிகள் நுழைவுவாயில் பகுதியில் திங்கள்கிழமை நீண்டநேரமாக பை ஒன்று தனியாகக் கிடந்தது. அந்தப் பகுதியில் ரோந்துப் பணியிலிருந்த பாதுகாப்புப் படை வீரா்கள் இது குறித்து விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தனா். இதையடுத்து அந்தப் பை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பைக்கு யாரும் உரிமை கோரவில்லை.
இதனால், அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து உடனே வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. சோதனை செய்ததில் அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதுமில்லை என்பது தெரியவந்தது. பின்னா் வெடிகுண்டு நிபுணா்கள் பையை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.