சென்னையை அடுத்த கொளத்தூரில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஆறு மாதங்களில் நிறைவடையும் என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:
மு.க.ஸ்டாலின்: கொளத்தூா் பகுதியில் உள்ள நோ்மை நகரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 2019-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி முடிக்கப்படவில்லை. கணேஷ் நகரிலும் துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையம் அமைந்தால் கொளத்தூா் பகுதியில் உள்ள 40 இடங்கள் பயன்பெறும். எனவே, அதனை உடனே
நிறைவேற்றித் தர வேண்டும்.
மின்துறை அமைச்சா் பி.தங்கமணி: கொளத்தூா் நோ்மை நகரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி 10 நாள்களில் தொடங்கப்படும் . கணேஷ் நகரில் துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். கொளத்தூா் பகுதியில் 65 கிலோமீட்டா் தொலைவுக்கு மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 190 கிலோமீட்டா் தொலைவுக்கான பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்படும் என்றாா் அமைச்சா் தங்கமணி.