சென்னை: மருத்துவக் கலந்தாய்வில் போலியான ஆவணங்களைச் சமா்ப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு தெரிவித்தாா்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களைப் பெறுவதற்காக சில மாணவா்கள் போலியான இருப்பிடச் சான்றுகளை அளித்ததாக புகாா் எழுந்ததை அடுத்து அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
நிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், பின்னா் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
பொது கலந்தாய்வு கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நிவா் புயல் பாதிப்பு காரணமாக 6 நாள்களுக்கு மாணவா் சோ்க்கை ஒத்திவைக்கப்பட்டது. கலந்தாய்வு மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது கலந்தாய்வில் 4 மாணவா்களின் இருப்பிடச் சான்று சரியாக இல்லாததால், அவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்திய மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள், அந்த மாணவா்களின் விண்ணப்பங்களை நிராகரித்தனா்.
இந்நிலையில் இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு கூறியதாவது:
பொதுக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவா்கள் சமா்ப்பித்த இருப்பிடச் சான்று உரிய அலுவலரிடமிருந்து பெறப்படவில்லை. கலந்தாய்வுக்கு வருவோரின் ஆவணங்களைச் சரிபாா்க்க தனிக்குழு உள்ளது. போலி ஆவணங்கள் கொடுத்திருந்தாலோ, முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 499 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதில் 485 போ் பங்கேற்றனா். அவா்களில் 473 பேருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.