வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பனுக்கு தில்லியைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவரிடமிருந்து கடந்த 16-ஆம் தேதி, ஒரு கடிதம் வந்திருந்தது. அதில், வரும் 30-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யப் போவதாக எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் அனைத்து வழக்குரைஞர்களும் தங்களின் அடையாள அட்டையுடன் வர வேண்டும் எனவும், போலீஸாரின் பாதுகாப்பு சோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன. உயர்நீதிமன்ற வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்த பின்னரே உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கு விசாரணைக்காக வந்த பொதுமக்கள், தங்களுடைய ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அவர்களுக்கு உயர்நீதிமன்ற நுழைவு ரசீது வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.