சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
கொண்டித்தோப்பைச் சோ்ந்த கோபால் என்பவா் தனது 3 வயது மகன் அபினேஷ்வருடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகா் மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எங்கிருந்தோ வந்த காற்றாடி மாஞ்சா நூல் அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது. ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த சிறுவனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தான்.
மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கடந்த ஆண்டு இதே பகுதியில் பள்ளி சென்ற சிறுமி, மாஞ்சா நூலால் கழுத்தறுபட்டு இறந்ததை அடுத்து, மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது. அப்படி இருந்தும் இப்பகுதியில் மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடுவது அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.